உக்ரைனுடனான எல்லையில் இருந்து துருப்புக்களை நகர்த்துவதாக ரஷ்யா வெளியிட்ட கருத்து தவறானது என சிரேஷ்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் எல்லையில் மேலதிகமாக 7,000 துருப்புக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளார். ஏதேனும் ஒரு சாக்குப்போக்கை கூறி உக்ரைனை எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்க ரஷ்யா தயாராக உள்ளது எனவும் சா்வசே ஊடகங்களிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்ததையடுத்து உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை முந்தைய தளங்களுக்கு நகர்த்துவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. உக்ரைனிடமிருந்து 2014 இல் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் இருந்து யுத்த டாங்கிகள் வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை நேற்று புதன்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டது.
எனினும் ரஷ்யா தனது படைகளை நகர்த்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மேற்குலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. சமீபத்திய நாட்களில் ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புக்கள் உக்ரைன் எல்லைக்கு வந்துள்ளன. நேற்று புதன் கிழமையும் மேலதிக துருப்புக்கள் வந்துள்ளன என வெள்ளை மாளிகை சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் திரும்புவதாக வெளியான அறிவிப்பை மட்டுமே நாங்கள் கேள்வியுற்றோம். ஆனால் அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று கூறினார். இவ்வாறான நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு முயற்சி குறித்த குற்றச்சாட்டுக்களை புடின் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, ஐரோப்பாவில் இன்னொரு போரை ரஷ்யா விரும்பவில்லை என்றும் கூறினார். எனினும் நவம்பர் முதல் பதற்றம் அதிகரித்து வருகிறது.
முன்னாள் சோவியத் குடியரசாகிய உக்ரைனுடன் ரஷ்யா ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. மேற்கத்திய நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் சேர போவதில்லை என்ற உத்தரவாதத்தை பெற புடின் விரும்புகிறார். நேட்டோவில் உக்ரைன் இணைவது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் கருதுகிறார். இந்நிலையில் நேட்டோவில் உக்ரைன் இணையாது என்ற சட்டபூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் புடின் கோருகிறார். எனினும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க அமெரிக்காவும் நேட்டோவும் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.